சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு
சுவாமிகளின் குறிக்கோளும் நோக்கமும்
மீன்பாடும் தேனாடாம் என்று புகழாரம் சூட்டப்பட்ட இலங்கையின் கிழக்கு மாகாணமான மட்டுநகருக்கு அருகே சில மைல்
தொலைவில் அமையப்பெற்ற காரைதீவு என்னும் அழகிய கிராமத்தில் பங்குனி மாதம் 27ம் திகதி 1892ம் ஆண்டு திரு சாமித்தம்பி
மற்றும் கண்ணம்மா தம்பதிகளுக்குப் பிறந்தவர் இந்த முத்தமிழ் வித்தகர். இவருக்கு தாய் தந்தையர் வைத்த இயற்பெயர்
மயில்வாகனன் ஆகும். காரைதீவு அல்லது காரைநகர் என்று அறியப்பட்ட அழகிய கிராமத்திற்கு அருகாமையில் அமைந்திருந்த
மற்ரொரு நகரான கல்முனை எனும் சிறுநகரின் மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியை துவங்கினார்.
அங்கு 10 ஆண்டுவரை கல்வி கற்ற அவரின் அறிவுத்திறமை கண்ணுற்ற பெற்றோர் அவரை மட்டக்களப்பு புனித மிக்ககேல்
கல்லூரிக்கு மாற்றினர். ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் வணிகம், கடற்போக்குவரத்து, ஏற்றுமதி, இறக்குமதி போன்றவற்றிற்கு
பெயர்போன இடம் மட்டுநகர் நகரின் மத்திய பகுதியில் அமைந்திருந்த மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி ஆங்கில புலமைக்கு
பெயர் போனது. பிருத்தானிய கேம்பிரிட்ஜ் சீனியர் பரீட்சையில் சித்தியடைந்த அவர் அதே பாடசாலையில் ஆரம்ப ஆசிரியராக
நியமிக்கப்பட்டார்.
தனது ஆசிரியர் தொழிற்பயிற்சியை மேற்கொள்ள விரும்பிய அவர் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள ஆசிரியர் பயிற்சிக்
கல்லூரியில் இணைந்துகொண்டார்.ஆங்கிலப் புலமையில் தேற்சி பெற்றிருந்த அவருக்கு தமிழ் இலக்கியத்தின் மீது பற்றுதல்
ஏற்படவே, ஆசிரியர் கலாசாலையில் விரிவுரையாளராக கடைமயாற்றிய தென்கோவை கந்தையா பிள்ளையிடம் பண்டையத்
தமிழ் இலக்கியத்தைக் கற்கத்துவங்கினார். இரண்டு ஆண்டுகள் கற்கைநெறி அவருக்கு பயிற்றப்பட்ட ஆசிரியர் என்ற சான்றிதழைக்
கொடுத்தது.
1912 ம் ஆண்டு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் இருந்து வெளியேறி மீண்டும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியில்
ஆசிரியராக இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். இருந்தும் இவரின் அறிவுப்பசி விடுவதாக இல்லை மூன்று ஆண்டுகள் கழித்து
1915 இல் கொழும்பு அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்ந்து விஞ்ஞானத்தை க ற்கத்துவங்கினார். அடுத்த ஆண்டில்
விஞ்ஞானத்தில் பகுதியான அறிவியலிலும் பட்டத்தை வென்றார். இவரின் தமிழ்ப்பற்றின் காரணமாக இவர் இந்திய தமிழ்நாட்டுடன்
நெருக்கமான நண்பர்களை பேணிவந்தவர்.
இதே சமயம் மதுரை தமிழ்ச்சங்கம் பண்டிதருக்கான தேர்வை நடாத்தி வந்தது, இத்தேர்வில் பங்கேற்ற முத்தமிழ் வித்தகர்
இலங்கையிலிருந்து பண்டிதர் பட்டத்தை முதன்முதலில் பெற்றவர் என்ற பெருமையையும் தனதாக்கிக் கொண்டார். விஞ்ஞான
தேற்சி காரணமாக கொழும்பு அரசினர் தொழிநுட்பக் கல்லூரியில் இரசாயன உதவி விரிவுரையாளராகப் பணியாற்றும் வாய்புக்
கிடைத்தது. இதே காலப்பகுதியில் யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியில் விஞ்ஞான ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
அத்துடன் நின்றுவிடாமல் 1920ம் ஆண்டு இலண்டன் பல்கலைக்கழகம் நடத்திய BSc தேர்வில் பங்கேற்று சித்தியும் அடைந்தார்.
இவரின் இருமொழிப் புலமை காரணமாக யாழ்ப்பாணத்தின் மானிப்பாய் இந்துக் கல்லூரியின் அதிபர் பதவியும் வந்து சேர்ந்தது.
ஐந்து ஆண்டுகள் மானிப்பாயில் கடமையாற்றியபின் திருக்கோணமலை கோணேஸ்வரா் இந்துக்கல்லூரியில் அதிபராக இணைந்தார்.
1928 ஆண்டுவாக்கில் இவரின் நாட்டம் யாழ்ப்பாணம் இராமகிருஷ்ணா மிசன் மீது விழுந்தது. அனேகரின் வேண்டுகொளுக்கிணங்க
இராமகிருஷ்ணா மிசன் வைத்தீசுவர வித்தியாலயத்தின் முகாமையாளராகவும் பணியாற்றியுள்ளார். இந்த காலப்பகுதிதான்
மயில்வாகனனாரின் விதியை மாற்றியது. தனதுள்ளே இருந்துகொண்டு உறுத்திக்கொண்டிருந்த துறவு உணர்வு துளிர் விட்டது.
ஆசிரியப் பதவியைத் துறந்து ராமகிருஷ்ண மிஷனில் இணைந்து சென்னைக்குப் புறப்பட்டார். சென்னையில் மயிலாப்பூர் மடத்தில்
சுவாமி சர்வானந்தரினால் பிரபோத சைத்தன்ய பிரிவில் பிரமச்சரிய தீட்சையுடன் சேர்த்து சந்நியாச தீட்சையும் இவருக்கு
வழங்கப்பட்டன. இரண்டு ஆண்டுகள் சந்நியாச பயிற்சியை முடித்துவிட்டு இராமகிருஷ்ண மிஷன் நடத்திய ஸ்ரீராமகிருஷ்ண
விஜயம் என்ற தமிழ்ச் சஞ்சிகைக்கு ஆசிரியரானார். இதே காலப்பகுதியில் வேதாந்த கேசரி என்ற ஆங்கில சஞ்சிகைக்கும்
ஆங்கிலக் கட்டுரைகளை எழுதத்தொடங்கினார்.
அத்துடன் நின்றுவிடாமல் மதுரைத் தமிழ்ச்சங்கம் நடாத்தி வந்த செந்தமிழ் எனும் சஞ்சிகையில் இலக்கியக் கட்டுரைகளைத்
தொடர்ந்து எழுதி வந்தார். 1924-ஆம் ஆண்டு சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தில் சுவாமி சர்வானந்தரால் சுவாமி விபுலாநந்தர்
என்ற துறவறப்பெயர் வழங்கி கெளரவிக்கப்பட்டார். அதன் பின்னர் இலங்கை திரும்பிய விபுலாநந்தர் , இராமகிருஷ்ண மிஷன்
மேற்கொள்ளும் கல்விப் பணிகளை ஒழுங்கமைத்துக் கொடுக்கும் பணிகளை கணகச்சிதமாக மேற்கொண்டார். அண்ணாமலைப்
பல்கலைக்கழகத்தில் 1931ம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியர் பணியை ஏற்றுக்கொண்டார், இக்காலப்
பகுதியில் தான் அவருடைய இசை சம்பந்தமான ஆராய்ச்சி ஆரம்பமாகியது.
தொன்மையான, பாரம்பரிய, கிராமிய தமிழர் இசை பற்றி அவர் பல ஆண்டுகளாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். நான்கு
ஆண்டுகால உழைப்பின் பின் அண்ணாமலைப் பல்கலைக்கழகதின் தமிழ்த்துறைத் தலைவர் பதவியில் இருந்தி விலகினார்.
1934ம் ஆண்டு இராமகிருஷ்ண மிஷன் அல்மோரா என்ற இடத்தில் மாயாவதி ஆசிரமத்தில் இருந்து வெளியிடும் 'பிரபுத்த பாரதம்'
என்ற சஞ்சிகையின் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். சுவாமி விபுலாநந்தர் தலைமையேற்று நடத்திய தமிழ்க் கலைச்சொல்லாக்க
மாநாடு 1936ம் ஆண்டு நடைபெற்றது. இவர் கலைசொல்லாக்கக் குழுவின் தலைவராகவும், வேதியியல் கலைச்சொல் நூற் குழுவின்
தலைவராகவும் இருந்து செயற்பட்டார்.
1936 ஆண்டு செப்டம்பர் 27ம் திகயன்று சென்னை மாகாணத் தமிழர் மாநாடு நடைபெற்ற போது, கலைச் சொல்லாக்கத்தைப்
பாராட்டித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்காலப் பகுதியில்தான் தமிழ் இசை பற்றிய முழுமையான ஆய்வு செய்து ஆய்வு
நூலாகிய யாழ் நூலை உருவாக்கினார். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவுடன் திருக்கொள்ளம்புத்தூர் வில்வாரண்யேசுவரர்
கோயிலில் திருஞானசம்பந்தரின் சந்நிதானத்தில் 1947ம் ஆண்டு அரங்கேற்றிவைத்தார். சுவாமிகளின் குறிக்கோளும் நோக்கமும்
ஸ்வாமி விபுலாநந்தர் ஒரு தொலைநோக்கு பார்வையுடைய தலைவர் மற்றும் ஆன்மிக ஆசான். அவர் தனது வாழ்நாளை ஒற்றுமையும்
அறிவாற்றலுடனும் கூடிய சமுதாயத்தை உருவாக்க உழைத்தார்.
அவரது பார்வை மனித வாழ்வின் பல்வேறு கூறுகளை ஒன்றிணைக்கும் எண்ணத்தில் மையம் கொண்டது. கல்வி, சமூக சீர்த்திருத்தம்
மற்றும் ஆன்மிக விழிப்புணர்வு ஆகியவற்றின் மூலம் மக்கள் ஒன்றிணைந்து சமாதானமாகவும் பரஸ்பர மரியாதையுடனும் வாழக்கூடிய
ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என ஆவல் கொண்டிருந்ததை அவரின் செயற்பாடுகள் உறுதி செய்தது. ஸ்வாமி விபுலாநந்தர்
ஒரு பன்முக திறமை கொண்டவராக இருந்தார்— ஒரு இந்து முனிவர், அறிஞர், கல்வியாளர், சமூக சீர்த்திருத்தவாதி மற்றும் பண்பாட்டு
சின்னமாக சிறப்புற்றார். இலங்கையின் குறிப்பாக தமிழ் சமூகத்தில் அவர் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவரது பார்வையும்
குறிக்கோளும் ஆன்மிகம், கல்வி, சமூக முன்னேற்றம் என்பவற்றில் ஆழமாக பதியப்பட்டிருந்தன.
அவர் தனது வாழ்க்கையையும் பணியையும் முன்னணி அறிவு, கருணை, மற்றும் சேவையின் ஒளியாய் உருவாக்கினார். நோக்கமும்:
ஒற்றுமையும் அறிவாற்றலுடனும் கூடிய சமூகம் ஸ்வாமி விபுலாநந்தரின் பார்வை, ஆன்மிக ஒளிவிழிப்புடன் சமூக நல்வாழ்வை
முன்னேற்றும் நோக்கில் இருந்தது. உண்மையான முன்னேற்றம் ஆன்மிக வளர்ச்சியும் அறிவு வளர்ச்சியும் சமநிலையாக நிகழும்போது
மட்டுமே பெற முடியும் என்று அவர் நம்பினார். அவரது பார்வை எந்த ஒரு சமுதாயத்திற்கும் அல்லது மதத்திற்கும் மட்டும்
ஒதுக்கப்படவில்லை; மாறாக அது சமாதானம், ஒற்றுமை, மற்றும் மனித கண்ணியத்தின் உலகளாவிய மதிப்புகளை உள்ளடக்கியது.
அவரது பார்வையின் மையப்புள்ளியாக கல்வியும் ஆன்மிகமும் ஒருங்கிணைந்ததாக இருக்க வேண்டும் என்பதேயாகும். மனிதர்கள்
நெறிமுறையும் நன்னெறிகளும் வழிகாட்டும் சமூகத்தில் வாழவேண்டும் என்பதே அவரது நோக்கம். தமிழ் மக்களின் பண்பாட்டு
பாரம்பரியத்தினை பாதுகாக்கவும் மத நல்லிணக்கத்தையும் வளர்க்கவும் அவர் விரும்பினார்.
கல்வி, சமூக சீர்திருத்தம் மற்றும் ஆன்மிக விழிப்புணர்வு :
ஸ்வாமி விபுலாநந்தரின் குறிக்கோள் அவரது ஆழமான கல்வி, சமூக முன்னேற்றம் மற்றும் ஆன்மிக விழிப்புணர்வில் வெளிப்பட்டது.
அவர் மனிதகுலத்திற்கு சேவை செய்வதை தனது வாழ்நாளாகக் கொண்டார்.
01. கல்வியை ஒரு சக்தியாக உருவாக்குதல்
ஸ்வாமி விபுலாநந்தர் கல்வியே மனித மற்றும் சமூக மாற்றத்திற்கான முக்கியமான கருவியாகும் என்று உறுதியாக நம்பினார்.
கல்வி என்பது அறியாமையும் வறுமையையும் நீக்குவதற்கான முக்கியமான வழி. அவர் கிராமப்புறங்களிலும் நல்ல கல்வியை
வழங்கும் பள்ளிகளையும் கல்வி நிறுவனங்களையும் நிறுவ முக்கிய பங்கு வகித்தார்.
02. தமிழ் பண்பாட்டின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி
தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் பண்பாட்டினை பாதுகாக்கவும் வளர்க்கவும் அவர் உழைத்தார். தமிழ் சமூகத்தில் ஒருமைப்பாட்டை
உருவாக்க கலாச்சார விழிப்புணர்வை ஊக்குவித்தார்.
03. சமூக சீர்திருத்தம் மற்றும் முன்னேற்றம்
சாதிய வேறுபாடு, வறுமை மற்றும் கல்வியின்மை போன்ற சமூகப் பிரச்சினைகளை நீக்க அவர் போராடினார். ஒவ்வொரு மனிதனும்
சமத்துவத்துடனும் கண்ணியத்துடனும் வாழவேண்டும் என்பதற்காக அவர் பாடுபட்டார்.
04. ஆன்மிக விழிப்புணர்வும் உலக சகோதரத்துவமும்
அவர் உண்மையான மகிழ்ச்சியும் திருப்தியும் ஆன்மிக விழிப்புணர்விலேயே உள்ளது என்று நம்பினார். மெய்யுணர்வு மற்றும் ஆன்மிக
பயிற்சியை மக்களிடையே பிரசாரம் செய்தார். மத நல்லிணக்கத்தையும் உலக ஒற்றுமையையும் ஊக்குவித்தார்.
அடிகளார் பல்துறை சார்ந்த பேரறிஞர். ஆசிரியராக, பண்டிதராக, விஞ்ஞானப் பட்டதாரியாக, பாடசாலைகளின் அதிபராக,
முகாமையாளராக, பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறைப் பேராசிரியராக, அறிஞராக, ஆராய்ச்சியாளராக, மொழிபெயர்ப்பாளராக,
விளங்கிய சுவாமி விபுலானந்தர், சமூகத்துறவியாக வாழ்ந்து தனது 55 வது வயதில் உடல்நிலை பாதிக்கப்பட்டு இந்தியாவில்
இருந்து நாடு திரும்பிய அடிகளார் 1947 ஜுலை மாதம் 19-ஆம் நாள் சனிக்கிழமை இரவு இறையடி சேர்ந்தார். இவரது சமாதி
மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தின் வளாகத்திலுள்ள பாரம்பரிய மரத்தின் கீழ் கல்லறை அமைக்கப்பட்டு அடக்கம்
செய்யப்பட்டது. இவரது சேவைகளை கெளரவிக்கும் முகமாக இலங்கை நாட்டிலுள்ள தமிழ்ப்பாடசாலைகளில் அகில இலங்கை
தமிழ் மொழி தினம் என வரையறை செய்து கொண்டாடப்படுகிறது.